விஜய்யின் ‘வாரிசு’-க்கு கூடுதல் திரைகள்: உதயநிதியிடம் முறையிட தயாரிப்பாளர் முடிவு

By செய்திப்பிரிவு

விஜய்யின் ‘வாரிசு’ படத்துக்கு தமிழகத்தில் கூடுதல் திரைகளை ஒதுக்க, உதயநிதி ஸ்டாலினிடம் முறையிடவுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார். பொங்கலுக்கு படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தை வெளியிடுவதில் தில் ராஜுவுக்கு பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. தொடக்கத்தில் சங்கராந்தி போன்ற விழாக் காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கே தெலங்கானா, ஆந்திராவில் முன்னுரிமை அளிக்கப்படும் எனக் கூறி தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தில் ராஜுவுக்கு செக் வைக்கப்பட்டதாக தகவல்கள் பரவின. அந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் ‘வாரிசு’ படத்திற்கு போதுமான திரையரங்குகள் ஒதுக்கப்படவில்லை என்று தில் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “தமிழகத்தில் நான் தயாரிக்கும் ‘வாரிசு’ படத்துடன் அஜித் நடிக்கும் படமும் வெளியாகிறது. தமிழகத்தில் விஜய் நம்பர் ஒன் ஸ்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டை பொறுத்தவரை 800-க்கும் மேற்பட்ட திரைகள் உள்ளன. நான் அவர்களிடம் எனக்கு 400-க்கும் மேற்பட்ட திரைகள் தருமாறு கெஞ்சிக்கொண்டிருக்கிறேன். இது வியாபாரம்.

என் படமும் பெரிய படமாக இருக்கும் நிலையிலும் நான் திரைகளுக்காக கெஞ்ச வேண்டியிருக்கிறது. இது ஒன்றும் ஒருத்தருக்கான உரிமை கிடையாது தானே? ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் உதயநிதி ஸ்டாலின் அஜித்தின் ‘துணிவு’ படத்தை வெளியிடுகிறார். விரைவில் சென்னைக்கு சென்று அவரிடம் எனக்கு கூடுதல் திரைகளை ஒதுக்குமாறு கேட்கப் போகிறேன். நடிகர் விஜய், அஜித்தை விட பெரிய ஸ்டார். ஒரு தயாரிப்பாளராக, விஜய் படத்திற்கு அதிக திரையிடங்களைக் கோருகிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE