“அந்தத் தருணத்திற்காக ஆவலாக இருக்கிறோம்” - பெற்றோராகும் அட்லீ - ப்ரியா தம்பதி

By செய்திப்பிரிவு

பிரபல இயக்குநர் அட்லீ தான் தந்தையாகப் போவதாக அறிவித்துள்ளார். இந்த மகிழ்ச்சித் தகவலைப் பகிர்ந்த அட்லீக்கு திரையுலகப் பிரமுகர்களும், நெட்டிசன்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் ‘ராஜா ராணி’ திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குநர் அட்லீ. ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என தொடர்ந்து நான்கு வர்த்தக வெற்றிப் படங்களைக் கொடுத்து திரையுலகில் முக்கியமான இடத்தை பிடித்தார். தற்போது பாலிவுட்டில் நுழைந்திருக்கும் அவர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். தவிர, தனது மனைவி பிரியாவுடன் இணைந்து 'A for Apple Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ‘அந்தகாரம்’ படத்தை தயாரித்திருந்தார்.

இயக்குநர் அட்லீக்கும், பிரியாவுக்கு கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி திருமணம் நடந்தது. தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைப்பெற்றது. இந்நிலையில் தானும், பிரியாவும் பெற்றோராகப் போகிறோம் என்ற செய்தியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். அதில், “மகிழ்ச்சியின் குவியலை தரப்போகும் அழகிய மழலையின் தருணங்களை இவ்வுலகிற்கு கொண்டு வரபோவதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அந்தத் தருணத்தை காண நாங்கள் ஆவலாய் காத்துக்கொண்டு இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார். இதையடுத்து தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE