திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்தார் ரஜினிகாந்த் - கடப்பாவில் அமீன்பீர் தர்காவிலும் வழிபட்டார்

By என். மகேஷ்குமார்

திருமலை: நடிகர் ரஜினிகாந்த் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் அதன் பிறகு கடப்பாவில் உள்ள அமீன்பீர் தர்காவிலும் வழிபட்டார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 12-ம் தேதி தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு இந்திய திரையுலகினர், பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ரஜினிகாந்த் புதன்கிழமை இரவு தனது மகள் ஐஸ்வர்யா உடன் திருமலைக்கு வந்தார். விடுதியில் சற்று நேரம்ஓய்வெடுத்த இவர்கள், அதிகாலை2 மணியளவில் சுப்ரபாத சேவையில் பங்கேற்க வைகுண்டம் காம்ப்ளக்ஸ்-க்கு வந்தனர்.

இவர்களை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி வரவேற்று, தரிசன ஏற்பாடுகளை செய்தார்.

ஏழுமலையானை தரிசித்த பிறகு ரங்கநாயக மண்டபத்தில் ரஜினிக்கு வஸ்திர ஆசீர்வாதம் செய்வித்து, தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.

தொடர்ந்து கோயிலுக்கு வெளியே வந்த ரஜினியை கண்டு ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர். அவர்களை நோக்கி கையசைத்த ரஜினி பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சுமார் 6 வருடங்கள் கழித்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தாலும் புதிதாக தரிசனம் செய்பவனைப் போல் பரவசமாக உணர்ந்தேன்” என்றார்.

ரஜினியும் அவரது மகள் ஐஸ்வர்யாவும் திருமலையில் இருந்து ரேணிகுண்டா சென்று, அங்கிருந்து விமானம் மூலம் கடப்பா சென்றனர். அங்கிருந்து காரில் கடப்பாவில் உள்ள புகழ்பெற்ற அமீன்பீர் தர்காவுக்கு சென்றனர். இவர்களுக்கு பின்னால் மற்றொரு காரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வந்தார்.

பிறகு ரஜினியும் ரஹ்மானும் தர்காவுக்குள் சென்று சிறிது நேரம் தொழுகை நடத்தினர். பிறகு மூவரும் சென்னைக்கு புறப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE