திருப்பதியில் மகள் ஐஸ்வர்யாவுடன் சாமி தரிசனம் செய்த நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆந்திராவில் உள்ள அமீன் தர்காவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் ஏ.ஆர்.ரஹ்மானும் செல்ல இருக்கிறார்.
73-வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவுடன் சுவாமி தரிசனத்திற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு சென்றிருந்தார். திருப்பதி மலையில் அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். திருமலையில் இரவு தங்கிய அவர் இன்று அதிகாலை மகளுடன் கோயிலுக்கு சென்று சுப்ரபாத சேவை மூலம் ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "6 ஆண்டுகளுக்கு பின் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது" என்றார். தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு ஆந்திராவின் கடப்பாவில் உள்ள மிகவும் பிரபலமான அமீன் தர்காவுக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் செல்கிறார்கள். அவர்களின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.