‘கருமேகங்கள் கலைகின்றன’ படப்பிடிப்பில் மீண்டும் பாரதிராஜா

By செய்திப்பிரிவு

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், 2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், பின்னர், குடும்பத்தினர் ஆலோசனைப்படி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு செப்டம்பர் முதல் வாரத்தில் வீடு திரும்பினார்.

இந்நிலையில், 2 மாத கால இடைவெளிக்குப்பிறகு உடல்நலம் தேறிய அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இயக்குநர் தங்கர் பச்சான் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இயக்கும் படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இன்று நடிகர் பாரதிராஜா கலந்துகொண்டுள்ளார்.

இது தொடர்பாக தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “படபிடிப்பில் ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்குவதற்கே எப்பொழுதும் நான் முனைகின்றேன். இம்முறை சிறந்த தொழில்நுட்பம் மற்றும் நடிப்பு கலைஞர்களுடன் இணைந்து ‘கருமேகங்கள் கலைகின்றன’ எனும் திரைப்படத்தை சிதையாமல் உருவாக்கிட பாடுபடுகின்றேன்.

பாதிக்கு மேல் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் பாரதிராஜாவின் உடல்நலம் குன்றியதால் அனைத்து பணிகளும் கடந்த 130 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இப்பொழுது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எண்ணற்ற இடையூறுகளைத் தாண்டி ஒவ்வொரு நாளும் முழுமூச்சுடன் உழைத்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளோடு” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE