“மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன்” - நடிகர் ‘லெஜண்ட்’ சரவணன்

By செய்திப்பிரிவு

கோவை: 'தி லெஜண்ட்' படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நாயகனாக அறிமுகம் ஆனவர் தொழிலதிபர் அருள் சரவணன். கோவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ‘அரசியலுக்கு வருவீர்களா’ என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

முதலில் விளம்பர படங்களில் நடித்த அருள் சரவணன், பின்னர் வெள்ளித்திரையில் ஹீரோவானார். அவர் நடிப்பில் வெளிவந்த 'தி லெஜண்ட்' திரைப்படம் சுமார் 600 திரை அரங்குகளில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கோவை கோல்டுவின்ஸ் பகுதியில் கலை ரசனை உள்ளவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள ‘நூர் பிரைடல் ஸ்டுடியோ’ நிறுவனத்தை திரைப்பட நடிகர் ‘லெஜண்ட்’ சரவணன் திறந்து வைத்தார். நடிகர்கள் ரோபோ சங்கர், அப்புக்குட்டி, நிறுவன உரிமையாளர் நூர்முகமது உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் நடிகர் ‘லெஜண்ட்’ சரவணன் பேசும்போது, “கடுமையாக உழைப்பவர்களை நேசிப்பவன் நான். கோவையில் கலை ரசனை உள்ளவர்களுக்காக ‘நூர் பிரைடல் ஸ்டுடியோ’ நிறுவனத்தை நூர்முகமது தொடங்கியுள்ளார். அவருடைய கடினமான உழைப்பு பாராட்டத்தக்கது. எனக்கு பல்வேறு நிகழ்வுகளுக்கு அழைப்புகள் இருந்தாலும் பெரும்பாலான நிகழ்வுகளுக்கு நான் செல்வதில்லை. கலைத் துறையில் உள்ளவர்களுக்கு மேக்கப் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. அதை முழுமையாக நேசித்து சேவை செய்து வருகிறார் நூர்முகமது. கோவை மக்களுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

அப்போது, ‘அரசியலுக்கு வருவீர்களா?’ என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். “அதை அந்த மக்களும், மகேசனும்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனா, மக்கள் கூப்பிடா வருவேன்” என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE