தமிழ்படங்களில் இது புது சப்ஜெக்ட் - ராமராஜனின் சாமானியன் குறித்து ராதாரவி

By செய்திப்பிரிவு

“தமிழ் படங்களில் இது புது சப்ஜெக்ட். இந்தபடத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது” என நடிகர் ராதா ரவி தெரிவித்துள்ளார்.

1990-களில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் ராமராஜன், நீண்ட இடைவெளிக்குப்பின் கடந்த 2012-ம் ஆண்டு 'மேதை' படத்தில் நடித்தார். அதையடுத்து 10 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் நாயகனாக வருகிறார். அவரது இந்த படத்துக்கு ‘சாமானியன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இப்படத்தை ராஹேஷ் இயக்குகிறார். ராமராஜனுடன், எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அச்சு ராஜாமணி இசை அமைக்கும் இந்த படத்திற்கு அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப்படம் குறித்து நடிகர் ராதாரவி பேசுகையில், “இந்தப்படத்தில் எனக்கு, ராமராஜன், எம்.எஸ்.பாஸ்கர் 3 பேருக்கும் இணையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. நல்ல சப்ஜெக்ட் இது. தமிழ் படங்களில் இது புது சப்ஜெக்ட். இந்தபடத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நான் அமெரிக்காவில் இருக்கும்போது அங்கிருக்கும் சிலர் கூட என்னிடம் படம் எப்போது வெளியாகும் என கேட்டார்கள். அதனால் எல்லா இடங்களிலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மக்கள் ரசிக்கும் சப்ஜெக்டாக இது இருக்கும். இந்தப்படம் மூலம் ராமராஜனுக்கு நிச்சயம் மறுவாழ்வு கிடைக்கும். அதை நீங்கள் தான் கொடுக்க வேண்டும். தமிழர்கள் நடிக்கும் படங்களுக்கு பார்வையாளர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE