நடிகர் விஜய் ஜோடியாக ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார், ராஷ்மிகா மந்தனா. கன்னட நடிகையான இவர், தெலுங்கு, இந்தியிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது முதல் கன்னட படமான ‘கிரிக் பார்ட்டி’ குறித்து பேசும்போது, தயாரிப்பாளரை குறிப்பிடாதது சர்ச்சையானது. பிறகு ‘காந்தாரா’ படத்தை இன்னும் பார்க்கவில்லை என்று கூறியதும் கன்னட ரசிகர்களிடம் எதிர்ப்பை ஏற்படுத்தியது. ராஷ்மிகா கன்னட சினிமாவை புறக்கணிக்கிறார் என்றும் அவர் கன்னடப் படங்களில் நடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறினர். இந்நிலையில் ‘காந்தாரா’ படத்தைப் பார்த்த ராஷ்மிகா, படக்குழுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “அந்தப் படம் வெளியான 2 நாட்களில் படம் பார்த்துவிட்டீர்களா? என்றார்கள். இன்னும் இல்லை என்றேன். பிறகு பார்த்தபின் படக்குழுவுக்கு வாழ்த்துகளைச் சொன்னேன். என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசுபவர்களைக் கண்டுகொள்ள மாட்டேன். தொழில் வாழ்க்கை பற்றி கேட்டால் பதில் சொல்வேன். கன்னட திரையுலகில் எனக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை” என ராஷ்மிகா கூறினார்.