‘மறுபிறவி போல் உணர்கிறேன்’ என்று புற்றுநோயிலிருந்து மீண்ட தெலுங்கு நடிகை ஹம்சா நந்தினி தெரிவித்துள்ளார்.
‘நான் ஈ’, ‘ருத்ரமாதேவி’ உள்பட பல படங்களில் நடித்திருப்பவர், தெலுங்கு நடிகை ஹம்சா நந்தினி. கடந்த வருடம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், அதற்காக அறுவைச் சிகிச்சை மற்றும் 9 முறை கீமோ சிகிச்சைப் பெற்றார். இப்போது குணமடைந்துள்ளார். வியாழக்கிழமை தனது 38 வது பிறந்த தினத்தை சினிமா படப்பிடிப்பில் கொண்டாடிய அவர், தான் மறுபிறவி எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“நான் மீண்டும் வந்துவிட்டேன். மறுபிறவி எடுத்தது போல உணர்கிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் இது சாத்தியமில்லை. அனைவருக்கும் அன்பு முத்தங்கள்” என்று தெரிவித்துள்ளார். அவர் எந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் என்பதை தெரிவிக்கவில்லை.