“‘பகாசூரன்’ படம் உண்மையைத் தழுவி எடுக்கப்பட்ட படம்; இது பெற்றோர்களுக்கு நிச்சயம் விழிப்புணர்வை ஏற்படுத்தும். நடிகர் அஜித்தின் கருத்தில் முழுமையாக உடன்படுகிறேன்” என படத்தின் இயக்குநர் மோகன்.ஜி தெரிவித்துள்ளார்.
தமிழ் தியாகராஜன் இயக்கத்தில் ராம் நடிக்கும் புதிய படத்தின் பூஜை சென்னையில் நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்டு க்ளாப்போர்டு அடித்து படத்தை தொடங்கி வைத்த இயக்குநர் மோகன்.ஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “24 மணி நேரத்தில் என்னுடைய ‘பகாசூரன்’ படத்தின் ட்ரெய்லர் 1 மில்லியன் பார்வையாளர்களை எட்டியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு முன்பு விமர்சித்தவர்களும், இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து வாழ்த்தியுள்ளனர். இந்தப் படம் உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்டது.
சேலத்தில் நடந்த சம்பவம்தான் இதை எடுக்கத் தூண்டியது. சென்டிசிடிவான கன்டென்ட். நான் எப்போதும் யாரையும் தாக்கி பேச வேண்டும் என்று எண்ணி படம் எடுப்பதில்லை. உண்மைச் சம்பவங்களை வைத்தே படம் எடுக்கிறேன். நிச்சயமாக ‘பகாசூரன்’ பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும். ஆன்லைன் ஆப்கள் மற்றும் ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயம் குறித்து படம் பேசும். படத்தில் செல்வராகவன் சூரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நான் நடிகர்களை நம்பி படம் எடுப்பதில்லை; மாறாக கன்டென்டை நம்பி தான் படமெடுக்கிறேன். கதைக்குத்தான் நாயகனைத் தேடுவனே தவிர, நாயகனுக்காக கதை உருவாக்கும் இயக்குநர் நானில்லை” என்றார்.
மேலும் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, ‘ஒரு நல்ல படம் அதுவாகவே விளம்பரமாகிவிடும் என்ற அஜித்தின் கருத்தை நான் முழுமையாக ஏற்கிறேன். அதற்கு உட்பட்டே ‘பகாசூரன்’ போஸ்டர் ஒட்டாமல், ட்ரெய்லர் நிகழ்வு இல்லாமல் யூடியூப்பை நம்பியே ட்ரெய்லரை வெளியிட்டேன். 1 மில்லியன் வியூஸ்களை எட்டியிருக்கிறேன்” என்றார்.