மதுரையை சேர்ந்த வீரமுருகன் என்பவர் இயக்கியுள்ள படம், ‘கிடுகு’. ‘சங்கிகளின் கூட்டம்’ என்று கேப்ஷன் வைத்திருக்கிற இந்தப் படத்தில், கல்லூரி வினோத், பிர்லா போஸ், கொம்பன் இன்பா, மணிமாறன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தணிக்கைக் குழு இந்தப் படத்துக்கு 250 கட் கொடுத்துள்ளது.
இதுபற்றி வீரமுருகன் கூறியதாவது: ‘கிடுகு’ என்பது அரசர் காலத்தில், எல்லையில் உயிர்விட தயாராக இருக்கும் வீரர்கள். அதாவது, தற்கொலைப் படை. இந்தக் கதைக்குப் பொருத்தமாகவும் புதுமையாகவும் இருந்ததால், இதை வைத்துள்ளோம். நான், கடவுள் பக்தன். திராவிடத்தால் என்னென்ன பாதிப்புகளைச் சந்தித்தோம் என்பதை இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறோம். எல்லா கடவுளும் ஒன்றுதான்.
ஆனால், ஒரு மதத்துக்கு மட்டும் ஏன் அடக்குமுறை என்பதைக் கேட்டிருக்கிறோம். யாரையும் புண்படுத்தும்படி எடுக்கவில்லை. ஆனால், சில கேள்விகளை எழுப்பி இருக்கிறோம். தணிக்கைக் குழு 250 கட் கொடுத்திருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியையும் நீக்கிவிட்டது. 2 கிளைமாக்ஸ் எடுத்து வைத்திருந்ததால், மாற்றினோம். இவ்வாறு வீரமுருகன் கூறினார்.