கேராளவில் ‘அவதார் 2’ வெளியாவதில் சிக்கல் இல்லை 

By செய்திப்பிரிவு

கேரளாவில் ‘அவதார் 2’ திரைப்படம் வெளியாவதில் இருந்த சிக்கல் தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘அவதார்’. இந்த படம் எதிர்பார்க்காத அளவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்தது, இப்படம் 3 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. இப்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது.

‘அவதார் 2’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்று 160 மொழிகளில் வெளியாக உள்ளது. வருகின்ற டிசம்பர் 16-ம் தேதி வெளியாக உள்ளதாக ‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. அந்த ட்ரெய்லர் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.

இந்த ‘அவதார் 2’ படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்துக்காக ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் சமயத்தில் பேரதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் திரையரங்கு உரிமையாளர்களிடம் விநியோகஸ்தர்கள் அதிக ஷேர் கேட்டு வந்தனர். இதற்கு கேரளா தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதாவது முதல் இரண்டு வாரங்களில் இப்படத்தின் லாபத்தில் 60 சதவீத தொகையை வழங்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்களிடம் நிர்பந்தித்தனர். ஆனால், திரையரங்கு உரிமையாளர்கள் அதை மறுத்து வழக்கமான தொகையை தான் தர முடியும் என தெரிவித்துவிட்டனர். இதனால் சிக்கல் நீடித்து வந்த நிலையில், இருதரப்பினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன் பாடு எட்டப்பட்டதால் படம் வெளியாவதில் சிக்கலில்லை என கூறப்படுகிறது. டிசம்பர் 16-ம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE