கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ்

By செய்திப்பிரிவு

‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான ‘மகாநடி’ படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்று அனைத்து தரப்பு மக்களிடையேயும் கவனம் பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கமர்ஷியல் படங்களுடன் தனி கதாநயாகியாகவும் படங்களில் அசத்தி வருகிறார். அண்மையில் அவர் நடித்த ‘சாணிக்காயிதம்’ படத்தில் அவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ‘மாமன்னன்’, தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா போன்ற படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில், ‘கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’ படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கீர்த்தி சுரேஷின் புதிய பட போஸ்டரை வெளியிட்டு, “புரட்சி குடும்பத்தில் இருந்துதான் தொடங்குகிறது. தயாராகுங்கள்” என தமிழில் பதிவிட்டுள்ளது.

ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு ‘ரகு தாத்தா’ என பெயரிடப்பட்டுள்ளது. படக்குழுவுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ், பிரபலமான வசனமான ‘ஏக் காவுமே ஏக் இசான் ரகுதாத்தா” என ஹிந்தியில் பதிவிட்டுள்ளார். சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ‘சாணிகாயிதம்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த யாமினி யக்னாமூர்த்தி படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு நடந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு மே மாதம் திரைக்கு வர உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE