ரத்தன் டாடா வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை: சுதா கொங்கரா

By செய்திப்பிரிவு

“ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை” என இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்த திரைப்படம் ‘சூரரைப்போற்று’. ஊர்வசி, கருணாஸ், மோகன் பாபு, விவேக் பிரசன்னா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 12-ம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டது.

மேலும், சிறந்தப் படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை என்றப் பிரிவுகளில், இந்தப் படம் 5 தேசிய விருதுகளைப் பெற்று அசத்தியது. இந்தப் படம் அக்‌ஷய் குமார் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த ரீமேக்கை சுதா கொங்காராவே இயக்குகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் ரத்தன் டாடா வாழ்க்கை வரலாற்றைத் தழுவி புதிய படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை இயக்குநர் சுதா கொங்கரா மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் மிகவும் போற்றும் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை. எனது அடுத்த படம் குறித்த உங்கள் ஆர்வத்திற்கு நன்றி! விரைவில்!” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE