‘கலகத் தலைவன்’ படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து நடிகர் ஆரவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கலகத் தலைவன்’. இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ஆரவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், தனக்கு கிடைத்த பாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “நம்பிக்கையுடைய நடிகனாக என்னுடைய கனவுலகின் இலக்காக வெளித்திரையைக் கருதினேன். ஏதாவது ஒருநாள் திரையரங்கில் அனைவராலும் பாராட்டப்படும் ஒரு பாத்திரம் கிடைக்கும் என்று ஆசைப்பட்டேன். ஏமாற்றங்கள், இடைவிடாத முயற்களால் என்னுடைய கனவுப் பயணம் தொடங்கியது.
ஆனால் 'நம்பிக்கை' மற்றும் உறுதியான 'நம்பிக்கை' என்னை உந்தித் தள்ளிக்கொண்டே இருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக, என்னுடைய ஒவ்வொரு சின்ன சின்ன முன்னேற்றத்திற்கும் பத்திரிகை, ஊடகங்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகள் ஆற்றலையும் உற்சாகத்தையும் தூண்டியது. தற்போது, 'கலக தலைவன்' படத்தில் நான் நடித்த 'அர்ஜுன்' கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பால் நான் மகிழ்ச்சியில் உறைந்திருக்கிறேன்.
இந்த நல்ல வாய்ப்பை தந்த உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி. ஒரு முன்னணி ஹீரோ ஒரு சக நடிகருக்கு இவ்வளவு பெரிய திரைபகிர்வை கொடுப்பது அரிதினும் அரிதான நிகழ்வு. அவருடன் இணைந்து இந்தப் படத்தில் பணியாற்றுவது ஒரு பாக்கியம். என்னை இந்தக் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்த இயக்குநர் மகிழ் திருமேனிக்கு நன்றி. அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கை மகத்தானது, என் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கைக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
» ‘கைதி’ படத்துக்கு நியாயம் சேர்க்கிறதா அஜய் தேவ்கனின் ‘போலா’? - இந்தி ரீமேக் டீசர் வெளியீடு
» “ஓர் அற்புத அனுபவம்” - பூர்விக வீட்டுக்குச் சென்ற நினைவலையை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்
எனக்கு உறுதுணையாக இருந்த கழகத் தலைவன் குழுவினருக்கு நன்றி. என்னுடைய நடிப்புக்கு கிடைக்கும் நேர்மறையான வார்த்தைகள் எமோஷனலாக உணரவைக்கின்றன. சிறிய கதாபாத்திரங்களில் நடித்தபோதும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், தற்போது ‘அர்ஜுன்’ கதாபாத்திரத்திற்கும் ரசிகர்கள் தங்கள் அன்பைப்பொழிய எப்போதும் தவறியது கிடையாது. அந்தப் பாராட்டுகளும், வரவேற்பும் என்னை முன்னோக்கி மேலும் மக்களை என்டர்டெயின்ட் செய்வதற்கான ஆற்றலை கொடுக்கிறது” என தெரிவித்துள்ளார்.