“தமிழ்ப் படங்களில் இனி தொடர்ந்து நடிப்பேன்” - ப்ரியாமணி 

By செய்திப்பிரிவு

"பத்து வருடங்களுக்குப் பிறகு தமிழ்ப் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இனி தொடர்ந்து தமிழில் நடிப்பேன்” என நடிகை ப்ரியாமணி தெரிவித்துள்ளார்.

ஹரி ஹரா பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் கன்னடா மற்றும் தமிழ் மொழிகளில் நேரடியாகவும் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் டப்பிங் செய்தும் பான் இந்தியா படமாக உருவாகியிருக்கும் படம் "DR 56". இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி தயாரித்ததுடன் நாயகனாகவும் நடித்திருக்கிறார் பிரவீன் ரெட்டி. பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு சென்னையில் இன்று நடந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் நாயகி ப்ரியாமணி, “‘சாருலதா’ படத்திற்கு பிறகு தமிழில் நான் நடித்து வெளிவரும் படம் ‘DR 56’ என்பதால் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இந்தக் கதையை இயக்குநர் என்னிடம் சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இது நிஜமாக நடந்த, நடந்து கொண்டிருக்கும் சம்பவம். இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்டபோது, இயக்குநர் சில புகைப்படங்களை என்னிடம் காட்டினார். அதை பார்த்துவிட்டு மிரண்டுபோன நான், ‘நீங்க சொன்ன மாதிரியே இந்த படத்தை எடுத்துட்டா. நிச்சயமா பெரிய வெற்றி பெறும்’ னு சொன்னேன். நான் எதிர்பார்த்தபடியே படம் நன்றாக வந்துள்ளது.

இந்த கதையில் நான் நடிப்பதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று எனக்கு இதில் மிகவும் முக்கியமான ரோல். சிபிஐ அதிகாரியாக நடிக்கிறேன். இன்னொரு காரணம் இந்தப் படத்தில் நாய் ஒன்றும் நடிக்கிறது. எனக்கு விலங்குகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதிலும் நாய் என்றால் ரொம்பவே ப்ரியம். அதனால் கதை கேட்டவுடனேயே ஓகே சொல்லிவிட்டேன்.

இது மருத்துவ மாஃபியா கும்பலை பற்றிய படம். இதில் ஒரு சண்டை காட்சியிலும் நடித்திருக்கிறேன். இந்த கதையை எழுதி, தயாரித்து, நடிகராகவும் அறிமுகமாகும் ப்ரவீன், மிகச்சிறப்பாகவே நடித்திருக்கிறார். சமூகத்துக்கு தேவையான மெசேஜ் உள்ள இந்தப்படத்தை அக்கறையுடன் வெளியிடும் ஏ.என். பாலாஜி சாருக்கு நன்றி. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள். பத்து வருடம் கழித்து நான் நடித்து வெளிவரும் படம் என்பதால் ரொம்பவே எதிர்பார்க்கிறேன். தமிழில் தொடர்ந்து நடிப்பேன். அதுக்கு எல்லோருடைய ஆதரவும் தேவை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE