பிரகாஷ் ராஜ், அரசியல் பிரச்சினைகளை வெளிப்படையாக விமர்சிக்கும் நடிகர்களில் ஒருவர். மத்திய அரசுக்கு எதிராக சமூக வலைதளப் பக்கத்தில் தனது கருத்துகளை அடிக்கடி பதிவிட்டு வருகிறார். இதனால் தன்னுடன் நடிக்க, சில நடிகர்கள் பயப்படுகிறார்கள் என்றும் தனது தொழில் வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, “என் அரசியல் கருத்துகளால், என்னுடன் சேர்ந்து பணியாற்றியவர்கள், இப்போது நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. அவரோடு நடிக்க வேண்டாம் என யாரும் சொல்லவில்லை. ஆனால், என் அரசியல் விஷயங்கள் அவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் விலகுகிறார்கள். அதில் வருத்தம் இல்லை. எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். பல நடிகர்கள் அமைதி காக்கிறார்கள். அவர்களைக் குறை சொல்ல விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.