“முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன்... ‘இரவின் நிழல்’ பாருங்கள்” - பார்த்திபன் விளக்கம் 

By செய்திப்பிரிவு

“இரவின் நிழல் படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமா, இரண்டாவது படமா என்ற முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.. படத்தை பாருங்கள்” என்று இயக்குநர் பார்த்திபன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த ஜூலை 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் வரலட்சுமி சரத்குமார், பிரியங்கா ருத், ரோபோ சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். உலக அளவில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக இந்தப் படம் உருவானதாக படக்குழுவால் சொல்லப்பட்டது. 64 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள நகரும் மற்றும் நகராத செட்டுகள் மூலம் காட்சிகள் உருவாக்கப்பட்டன. இந்தப் படத்திற்கு பல்வேறு பாராட்டுகளும், நேர்மறை, எதிர்மறை விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ‘இரவின் நிழல்’ வெளியாகியுள்ளது. இப்படத்தை க்ளிக் செய்து ஓபன் செய்தால், படத்தின் தொடக்கத்தில் ட்ரிவியா (Trivia) என்ற தகவல் பிரிவில், “உண்மை என்னவென்றால், இது உலகத்தின் இரண்டாவது சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம். இதன் இயக்குநர் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இயக்குநர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “அன்பான ரசிகர்களுக்கு.. பணிவான வணக்கம். ‘இரவின் நிழல்’ உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்பதில் எந்த ஐயமுமில்லை. அந்தப் பெருமையுடன் மட்டுமே இந்தப் படம் தயாரிக்கப்பட்டது. அந்தப் பெருமைக்காக மட்டுமே மிகப்பெரிய பொருட்செலவில் 3 வருடம் என்னைப்போன்ற ஒரு சின்சியரான கலைஞனுடைய வாழ்க்கையை பணயம் வைத்து எடுக்கப்பட்ட படம். இந்தப் படம் முதல் படமா? இரண்டாவது படமா? என்ற விமர்சனங்களையெல்லாம் தாண்டி இந்தப் படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. தயவு செய்து அனைவரும் இந்தப் படத்தை பாருங்கள். முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE