ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 3-வது படமான ‘லால் சலாம்’ பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.
கடந்த 2012-ல் '3' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக 2015-ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘வை ராஜா வை’ என்கிற படத்தை இயக்கினார். இந்த நிலையில், தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக இயக்கத்தில் இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். 'லால் சலாம்' என பெயரிட்டுள்ள இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க, விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் கலை இயக்குனராக ராமு தங்கராஜ் மற்றும் படத்தொகுப்பாளராக பிரவீண் பாஸ்கர் ஆகியோர் இந்தப் படத்தில் பணியாற்ற உள்ளனர்.
இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப குழுவினர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று லைகா தமிழ் குமரன் தெரிவித்துள்ளார்.