பெருமழையில் தேங்கிவிடுகிறது சிறு தொழில் வியாபாரம் - ‘இரவின் நிழல்’ குறித்து பார்த்திபன் 

By செய்திப்பிரிவு

“அமேசானில் இன்று முதல்’பொன்னியின் செல்வன்’. எனவே, வரும் வாரம் வருமாம் ‘இரவின் நிழல்’ - செய்தி. பெருமழையில் தேங்கிவிடுகிறது சிறு தொழில் செய்வோரின் வியாபாரம்” என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த ஜூலை 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் வரலட்சுமி சரத்குமார், பிரியங்கா ருத், ரோபோ சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். உலக அளவில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக இந்தப் படம் உருவானதாக படக்குழுவால் சொல்லப்பட்டது. 64 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள நகரும் மற்றும் நகராத செட்டுகள் மூலம் காட்சிகள் உருவாக்கப்பட்டன.இந்தப் படத்திற்கு பல்வேறு பாராட்டுகளும், நேர்மறை, எதிர்மறை விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. படம் திரையரங்குகளில் வெளியாகி 3 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் ஓடிடி ரிலீஸ் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

முன்னதாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் 'இரவின் நிழல்' படம் வெளியாகும் என பார்த்திபன் தெரிவித்திருந்தார். பின்னர், “மன்னிக்க….நானும் ஆவலுடனே காத்திருக்கிறேன், but some technical issues it’s taking time-ன்னு அமேசான்-ல சொல்றாங்களாம்.மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்திக் கொண்டு தெரிவிக்கிறேன். அதுவரை பொறுத்தருள்க திரையரங்கில் நீங்கள் எனக்களித்த வரவேற்பே என்னைத் திக்குமுக்காட வைத்தது. நான் பெரிதும் மதிக்கும் நீங்கள் ஓடிடி-யில் வர காத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளித்தாலும், தாமதமாவதற்கு மீண்டும் ஒரு முறை மன்னிப்புக் கேட்டு, ஒடிடியில் வருகையில் பேராதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''அமேசானில் இன்று முதல்’பொன்னியின் செல்வன்’. எனவே,வரும் வாரம் வருமாம் ‘இரவின் நிழல்’ - செய்தி. பெருமழையில் தேங்கிவிடுகிறது சிறு தொழில் செய்வோரின் வியாபாரம். அன்றைய உணவிற்கு அன்றன்று உழைக்கும் மக்கள் நிலையே கவலைக்கிடம். இடர் காலங்களில் ஒருவருக்கொருவர் கடுகளவு உதவுவதும் பெருங்கொடை. குடையாக விரியும் அரசின் உதவிகள், அடுத்த சீசனில் மழைக்கும்முன் இடும் கூடுதல் திட்டமிடலால் மக்கள் நலம் கூடும். மழைசாரல் பட சூடான தேனீரோடு துவங்குவோம் இந்நாளை!'' என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE