கன்னடத்தில் கவனம் ஈர்த்த படைப்பின் தமிழ் ரீமேக் - வரலட்சுமி நடிக்கும் ‘கொன்றால் பாவம்’

By செய்திப்பிரிவு

பிரபல கன்னட நாடகம் ஒன்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். 'கொன்றால் பாவம்' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படம் பூஜையுடன் தொடங்கியது.

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் படம் ‘கொன்றால் பாவம்’. இன்ஃபேக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்பட பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது. படப்பிடிப்பு நவம்பர் 1-ஆம் தேதி ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்க இருக்கிறது. 1981-களில் நடக்கும் க்ளாஸிக் க்ரைம் த்ரில்லர் கதையான இந்த திரைப்படம், மோகன் ஹப்பு எழுதிய பிரபல கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.



கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குநர் தயாள் பத்மநாபன், இந்தக் கதையை முதலில் கன்னடத்தில் இயக்கினார். 'கரால ராத்திரி' (Karaala Ratri) என்ற இத்திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த துணை நடிகைக்கான கர்நாடக மாநில விருதுகளை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தை தயாள் பத்மநாபனே இப்போது தமிழிலும் இயக்க உள்ளார். விழுப்புரத்தில் பிறந்த தமிழரான தயாள் பத்மநாபன், கன்னடத்தில் 18 திரைப்படங்களையும், தெலுங்கில் 1 திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் அவர் கன்னட மொழியில் 8 திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

வரலகட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் ப்ரதாப் இருவரும் படத்தின் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், TSR ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோரும் நடிக்க உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE