கடினமான கட்டத்திலிருந்து மீண்டு வந்துள்ளீர்கள் அன்பே விராட்! - அனுஷ்கா நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

''அதுவும் ஒரு கடினமான கட்டத்திற்கு பிறகு அவர் முன்பை விட வலிமையானவராகவும், புத்திசாலித்தனமானவராகவும் அதிலிருந்து மீண்டு வெளியே வந்தார் என்பதை புரிந்து கொள்வாள்'' விராட் கோலியின் அதிரடி ஆட்டம் குறித்து அனுஷ்கா ஷர்மா நெகிழ்ந்துள்ளார்.

டி20 உலக கோப்பை போட்டியின் சூப்பர் 12 சுற்று போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் அதிரடியாக ஆடிய விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்களை குவித்து அதிரடி காட்டினார். அவரது வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர், 'அழகனே! அசத்தலான அழகனே! மக்களுக்கு இன்று இரவு மிகச்சிறந்த மகிழ்ச்சியை பரிசளித்துள்ளீர்கள். அதுவும் தீபாவளிக்கு முன்னதாக. நீங்கள் ஒரு அற்புதமான மனிதர் என் அன்பே. உங்கள் மன உறுதியும், நம்பிக்கையும் என்னை மிரளவைக்கிறது. என் வாழ்க்கையின் மிகச்சிறந்த போட்டியை நான் இப்போதுதான் பார்த்திருக்கிறேன். ஆனால் நம் மகள் மிகவும் சிறியவளாக இருப்பதால், அவளுடைய அம்மா ஏன் அறையில் நடனமாடுகிறார், காட்டுத்தனமாக கத்தினார் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இருந்தாலும் ஒரு நாள் அவள் தன்னுடைய அப்பா மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடினார் என்பதை அவள் புரிந்துகொள்வாள். அதுவும் ஒரு கடினமான கட்டத்திற்கு பிறகு அவர் முன்பை விட வலிமையானவராகவும், புத்திசாலித்தனமானவராகவும் அதிலிருந்து மீண்டு வெளியே வந்தார் என்பதை புரிந்து கொள்வாள்.
உங்களை எண்ணி பெருமை கொள்கிறேன். உங்கள் வலிமை தொடரக்கூடியது; என் அன்பு எல்லையற்றது. உங்களை எப்போதும் நேசிக்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE