''முதல்வர் மு.க.ஸ்டாலின் உண்மையை வெளிப்படையாக பேசியுள்ளதன் மூலம் உயர்ந்து நிற்கிறார்'' என ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சென்னையில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ''நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்த புது பிரச்சினையையும் உருவாக்கி இருக்கக் கூடாதே என்ற நினைப்புடன்தான் கண்விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னைத் தூங்கவிடாமல் ஆக்கிவிடுகிறது. உங்கள் செயல்பாடுகள் கட்சிக்கும் உங்களுக்கும் பெருமை தேடித் தருவதுபோல் அமைய வேண்டுமே தவிர, சிறுமைப்படுத்துவதாக அமையக்கூடாது. பொது இடங்களில் சிலர் நடந்து கொண்ட முறையின் காரணமாக, கட்சி பழிகளுக்கும், ஏளனத்துக்கும் ஆளானது’’ என்று தன் மன வேதனையை கொட்டித் தீர்த்தார்.
இந்நிலையில், அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த அணுகுமுறையை வெகுவாக பாராட்டியுள்ள ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில், ''பொதுவெளியில் மனம் விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் உண்மையை பேசியுள்ளார்; இது வெளிப்படையான அச்சமற்ற அவரது வலிமையைக் காட்டுகிறது. இதனால், அவர் உயர்ந்து நிற்கிறார்” எனப் பதிவிட்டுள்ளார்.
» தமிழக அளவிலான வசூலில் ‘விக்ரம்’ படத்தை முந்தி ‘பொன்னியின் செல்வன்’ முதலிடம்
» ஜல்லிக்கட்டு காளைகளின் முக்கியத்துவம் சொல்லும் பேட்டைக்காளி