ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குபவர்களுக்கும் வளர்ப்பவர்களுக்கும் இடையே உள்ள பெருமை, வீரம், விளையாட்டுத் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி, ‘பேட்டைக்காளி’ என்ற வெப் தொடர் உருவாகியுள்ளது. ஆஹா ஓடிடி தளத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள இதில், கலையரசன், கிஷோர், வேல ராமமூர்த்தி, ஷீலா உட்பட பலர் நடித்துள்ளனர். ‘மேற்கு தொடர்ச்சி மலை’ அந்தோணி நாயகனாக நடிக்கிறார்.
ராஜ்குமார் இயக்கும் இந்தத் தொடரை இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தத் தொடர் பற்றி, ராஜ்குமார் கூறும்போது, “ஆதிகாலத்தில் மனிதர்கள், காளைகளை அடக்கியது இப்போதும் நம் கலாச்சார விளையாட்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது நம் நாட்டிலேயே நம் மாநிலத்தில்தான் நடக்கிறது. நம் கலாச்சாரத்தில் காளைகளின் முக்கியத்துவம் குறித்து பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஜல்லிக்கட்டு உலகில், இதுவரை சொல்லப்படாத கதைகளை ஆராயவும் இந்த இணையத் தொடரை உருவாக்கியுள்ளோம்” என்றார். இதன் டிரெய்லர் சென்னையில் வெளியிடப்பட்டது.