கேரளாவில் கோயில் குளத்தில் மூழ்கி உதவி இயக்குநர் மரணம்

By செய்திப்பிரிவு

கேரளாவில் கோயில் குளத்தில் மூழ்கி உதவி இயக்குநர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 41.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்சலகுடா பகுதியைச் சேர்ந்தவர் தீபு பாலகிருஷ்ணன்( 41). மலையாளத்தில் வெளியான ‘உரும்புகள் உறங்கரில்லா’, ‘ஒன்ஸ் இன் மைன்ட்’ உள்ளிட்ட படங்களில் இவர் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். மேலும், ‘உரும்புகள் உறங்கரில்லா’ படத்தில் அவர் நடித்தும் இருக்கிறார். இந்நிலையில், தீபு பாலகிருஷ்ணன் இரிஞ்சகுலடா பகுதியில் உள்ள கோயில் குளம் ஒன்றில் நேற்று குளிக்கச் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது கோயில் குளக்கரையில் தீபு பாலகிருஷ்ணனின் உடை மற்றும் காலணி இருந்துள்ளது. இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். கோயில் குளத்தில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு தீபுவின் உடல் மீட்கப்பட்டது. அவரது மறைவிற்கு மலையாளத் திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE