கமல்ஹாசன், பஹத்பாசில், விஜய் சேதுபதி நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘விக்ரம்’. அனிருத் இசை அமைத்திருந்த இந்தப் படத்தில் சூர்யா, ‘ரோலக்ஸ்’ என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இது வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழா பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மனைவி ஜோதிகாவுடன் கலந்துகொண்ட சூர்யாவிடம், ரோலக்ஸ் கேரக்டர் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் இன்று என்னவாக இருந்தாலும் அதற்கு ஊக்கமாக இருந்தவர் கமல்ஹாசன். அவர் இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னதும் மறுக்க முடியவில்லை. அவருக்காகவே அந்த ரோலக்ஸ் கேரக்டரில் நடித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
‘ரோலக்ஸ் மீண்டும் வருவாரா?’ என்ற கேள்விக்கு, “இதற்கு காலம் பதில் சொல்லும். படம் உருவானால் அந்த கேரக்டரில் நிச்சயம் மீண்டும் நடிப்பேன்” என்றார். இந்த விழாவில் சூர்யாவின் ‘ஜெய்பீம்’ படம் 2 விருதுகளையும் ‘சூரரைப் போற்று’ படம் சிறந்த நடிகர் உட்பட 7 விருதுகளையும் வென்றுள்ளது.