‘ஆதிபுருஷ்’ டீசர் பார்த்தபோது குழந்தையாக மாறிவிட்டேன்: நடிகர் பிரபாஸ்

By செய்திப்பிரிவு

''ஆதிபுருஷ் படத்தின் டீசரை பார்த்தபோது குழந்தையாக மாறிவிட்டேன்'' என நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியில் வெளியான ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' என்கிற படத்தை இயக்கி, தேசிய விருது பெற்றவர் ஓம் ராவத். இவரது இயக்கத்தில், ராமாயண கதையைத் தழுவி உருவாகிவரும் படம் ‘ஆதிபுருஷ்'. இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் கதையின் நாயகனாக ‘பாகுபலி’ புகழ் பிரபாஸும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோனும் நடித்திருக்கிறார்கள்.

டி - சீரிஸ்,ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஐமேக்ஸ், 3டி முறையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தின் டீசரை படக்குழு அயோத்தியில் வெளியிட்டது. 'ஆதிபுருஷ்' படத்தின் டீசரில் உள்ள கிராஃபிக்ஸ் காட்சிகள் வீடியோ கேம் போலவும், சோட்டா பீம் டீசர் போலவும் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. படத்தில் ராவணனாக நடித்திருக்கும் சயீஃப் அலிகான் கதாபாத்திரம் குறித்தும் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் படத்தின் டீசர் பத்திரிகையாளர்களுக்கு 3டி தொழில்நுட்பத்தில் திரையிடபட்டு காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் படம் குறித்து பேசிய நடிகர் பிரபாஸ், ‘‘ஆதிபுருஷ்’ டீசரை முதன்முதலில் 3டி’ எஃபெக்டில் பார்த்தபோது ஒரு குழந்தையாக மாறி பரவசமடைந்தேன். இந்த டீசரை ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் ரசிகர்களுக்காக 60-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். இது நிச்சயமாக திரையரங்குகளில் காணவேண்டிய ஒரு படம். இப்படத்திற்காக உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டிக் காத்திருக்கும் அதேவேளையில் அடுத்த 10 தினங்களுக்கு இப்படம் குறித்து பல சர்ப்ரைஸான கன்டென்டுகளை வழங்க விருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE