“என்னையும், என் குழந்தைகளையும் தாக்கினார்” - பிராட் பிட் மீது ஏஞ்சலினா ஜோலி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

நியூயார்க்: பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது முன்னாள் கணவர் பிராட் பிட் தன்னையும், தனது குழந்தைகளையும் தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஹாலிவுட்டின் பிரபல நடிகையாக அறியப்படுபவர் ஏஞ்சலினா ஜோலி. உலகிலேயே அதிக சம்பளம் பெறும் பிரபலங்களில் ஒருவரான இவர், சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதையும் வென்றவர். உலக அளவில் சமூகப் பணிகள் மூலமும் கவனிக்கப்படுபவர். பிரபல ஹாலிவுட் நடிகரும், தனது 12 ஆண்டுகால காதலருமான பிராட் பிட்டை கடந்த 2014-ஆம் ஆண்டு ஏஞ்சலினா ஜோலி திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். அதில் மூன்று குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டவர்கள். இரண்டு ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பிறகு ஏஞ்சலினா ஜோலி - பிராட் பிட் இருவரும் 2016-ஆம் ஆண்டு பிரிந்தனர். கடந்த 2019-ஆம் ஆண்டு இருவருக்கும் சட்டபூர்வமாக விவாகரத்து கிடைத்தது.

இந்த நிலையில், ஏஞ்சலினா ஜோலியும், பிராட் பிட்டும் ஒன்றாக இருந்தபோது, ஒரு மதுபான நிறுவனத்தை வாங்கியுள்ளனர். அந்த மதுபான நிறுவனப் பங்கை ஏஞ்சலினா ஜோலி ஒப்பந்த விதிமுறைகளை மீறி விற்றுவிட்டதாக பிராட் பிட் வழக்கு தொடர்ந்தார்.

பிராட் பிட்டின் வழக்குக்கு எதிராக புதிய வழக்கு ஒன்றை ஏஞ்சலினா ஜோலி தாக்கல் செய்துள்ளார். அதில், அந்த நிறுவன ஒப்பந்தத்தில் தன்னை பிராட் பிட் வலுக்கட்டாயமாக கையெழுத்திட செய்தார் என்றும், அந்த விவகாரத்தில் தன்னையும், தன் குழந்தைகளையும் பிராட் பிட் தாக்கினார் என்றும் ஏஞ்சலினா ஜோலி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஏஞ்சலினா ஜோலியின் வழக்கறிஞர் கூறும்போது, “2016-ஆம் ஆண்டு இந்த விவகாரம் நடந்தபோது, பிராட் பிட் ஒரு குழந்தையின் முகத்தைப் பிடித்து அழுத்தினார். மேலும், மற்றொரு குழந்தையின் முகத்தில் அறைந்தார். ஜோலியின் தலையைப் பிடித்து உலுக்கினார்" என்று தெரிவித்திருக்கிறார்.

ஏஞ்சலினா ஜோலி முதல் முறையாக பிராட் பிட்டால் தனக்கு நடந்த குடும்ப வன்முறை குறித்து வாய்திறந்திருப்பது ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE