'பொன்னியின் செல்வன்' படத்தைக் கொண்டாடி அமுல் வெளியிட்ட டூடுல்!

By செய்திப்பிரிவு

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி உள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை சிறப்பிக்கும் வகையில் டூடுல் வெளியிட்டுள்ளது அமுல் இந்தியா நிறுவனம். இது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

நடிகர்கள் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்துள்ள படம் தான் பொன்னியின் செல்வன். கடந்த செப்டம்பர் 30-ம் தேதி இந்த படம் தமிழகம் உட்பட உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், சுபாஷ்கரனின் லைகா புரொட்க்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்தது.

இந்த படம் வெளியான முதல் இரண்டு நாட்களில் சுமார் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகள் அனைத்தும் அரங்கம் நிறைந்து காட்சி அளிக்கின்றன. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை இந்த படம் பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் முன்னணி உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான அமுல் நிறுவனம் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பிரதான கதாபாத்திரங்களான கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் விக்ரம் ஆகியோரின் பாத்திரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமுல் நிறுவனத்தின் டிரேட்மார்க் சின்னமான அமுல் பேபிக்கு கொடுத்து விளம்பரம் செய்துள்ளது. நடப்பு நிகழ்வுகளை வைத்து கார்டூன் வரைந்து விளம்பரமாக வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது அந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் ஒரு பகுதியாக இது வெளியிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE