இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரிடம் ட்விட்டரில் தனது தேர்வு கட்டணத்திற்கு உதவுமாறு கோரிக்கை வைத்த சில நிமிடங்களில் அந்த மாணவிக்கு அவர் உதவி செய்துள்ளார்.
நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். அண்மையில் டெல்லியில் நடந்த தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டவர், 'சூரரைப்போற்று' படத்தின் சிறந்த பிண்ணனி இசைக்கான தேசிய விருதை பெற்றியிருந்தார். இது தொடர்பான புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தவர், 'பறந்தாகுது ஊர்குருவி' என தலைப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூலிங் க்ளாஸ் அணிந்து மாஸான லுக்கில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்துக்கான கமெண்டில் மாணவி ஒருவர், ''நான் கும்பகோணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பிசிஏ படித்து வருகிறேன். இந்த மாதம் என்னுடைய தேர்வுகள் தொடங்க உள்ளன. தேர்வுக் கட்டணம் தொடர்பான விவரங்களை அனுப்பியிருக்கிறேன்'' என உதவி கோரியிருந்தார். அந்த மாணவியின் கமெண்டை படித்த ஜி.வி.பிரகாஷ் ''பணம் உங்கள் ஜிபே கணக்கிற்கு அனுப்பப்பட்டுவிட்டது'' என பதிலளித்துள்ளார்.