‘பொன்னியின் செல்வன்’ படம் அல்ல... அது ஒரு சவால்! - இயக்குநர் பேரரசு

By செய்திப்பிரிவு

'பொன்னியின் செல்வன்’ படத்துக்காக இயக்குநர் மணிரத்னத்தை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார் இயக்குநர் பேரரசு.

சென்னையில் நடந்த ‘ஆரகன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பேரரசு, “இப்போது வெளியாகியிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ ஒரு படம் அல்ல... அது ஒரு சவால். எம்ஜிஆர், கமல் ஆகியோர் காலத்தில் முயற்சித்து முடியாமல் போனதை. இப்போது மணிரத்னம் சாதித்திருக்கிறார்.

திருப்பாச்சி படத்தை இயக்க ஆரம்பித்த சமயத்தில் சினேகன் எனது படத்தில் பாடல் எழுத வேண்டும் என விரும்பினேன். அப்போது அவரிடம் சொல்வதற்காக நானே டம்மியாக சில வார்த்தைகளைப் போட்டு இப்படித்தான் பாடல் வேண்டுமென எழுதி வைத்திருந்ததை அவரிடம் காட்டினேன். அதை பார்த்துவிட்டு இந்தப் பாட்டே நல்லா தான் இருக்கு என்று கூறி பாட்டு எழுதும் வாய்ப்பை எனக்கே கொடுத்தார். எனக்குள் இருந்த கவிஞனை வளர்த்துவிட்ட சினேக கவிஞன் அவர். விஜய்யும் அதற்கு உற்சாகம் கொடுத்தார். வெளிநாட்டிலிருந்து இங்கே படம் தயாரிக்க வருபவர்கள் தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்துகிறார்கள். ஆனால், இங்கிருப்பவர்களோ வெளியூருக்கு ஓடுகிறார்கள்” என்றார்.

பாடலாசியர் சினேகன் பேசுகையில், “இந்த படத்தின் இயக்குநர் அருண்குமார் என்னை பாடல் எழுத அணுகியபோது, படத்தின் பட்ஜெட் குறித்து பேசி எப்படியாவது என்னை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என முயற்சித்தார். என்னை பொறுத்தவரை ஐநூறு ரூபாய்க்கு பாட்டு எழுதிய போதும் சரி, தற்போது மூன்று லட்ச ரூபாய்க்கு பாட்டு எழுதும்போதும் சரி.. சினிமாவுக்குத்தான் பாட்டு எழுதி வருகிறேனே தவிர, நடிகர்களுக்காகவோ பணத்துக்காகவோ பாட்டு எழுத வரவில்லை. பத்து படங்களில் மூன்று படங்களுக்கு பணம் வாங்காமல் தான் பாட்டு எழுதி தருகிறேன்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE