தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் ‘பொன்னியின் செல்வன்’ வசூல் ரூ.27 கோடி

By செய்திப்பிரிவு

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் ரூ.27 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்கி எழுதிய வரலாற்று புனைவான 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சரத்குமார், பார்த்திபன் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்த இந்தத் திரைப்படம் நேற்று (செப்டம்பர் 30) திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து படத்தை தயாரித்தது.

பான் இந்தியா முறையில் உருவான இப்படத்தின் இரண்டு பாகங்களின் பட்ஜெட் ரூ.500 கோடி என கூறப்படுகிறது. இந்நிலையில், படம் முதல் நாள் வசூலாக நேற்று தமிழ்நாடு முழுவதும் ரூ.27 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் மட்டும் ரூ.3.20 கோடியை வசூலித்துள்ளது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வெளியான படங்களில், முதல் நாளில் அதிக வசூலை குவித்த படங்களின் பட்டியலில் 3-வது இடத்தில் இணைந்துள்ளது 'பொன்னியின் செல்வன் பாகம் 1'. இதில் முதல் இடத்தில் அஜித்தின் ‘வலிமை’யும், இரண்டாவது இடத்தில் விஜயின் 'பீஸ்ட்' படங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. | வாசிக்க > பொன்னியின் செல்வன் - பாகம் 1: திரை விமர்சனம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE