‘நானே வருவேன்’ படத்தை சூசகமாக கலாய்த்த பார்த்திபன் - ‘ரியாக்ட்’ செய்யாத சக நடிகர்கள்

By செய்திப்பிரிவு

தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'நானே வருவேன்' படத்தை நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் சூசகமாக கிண்டலடித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நாளை (செப்டம்பர்30) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனிடையே இன்று (செப்டம்பர் 29) செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'நானே வருவேன்' திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, பார்த்திபன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின்போது பேசிய நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், ''நானே வருவேன் என்று சொல்லிவிட்டு அடம்பிடித்துதான் இன்று வந்தேன். இன்றைக்கு பத்திரிகையாளர் சந்திப்பு என்றதும் என்னால் வர முடியாது என கூறிவிட்டேன். காலையில் தஞ்சாவூர் செல்கிறேன். தஞ்சாவூரில் படத்தை பார்க்கப்போகிறேன். படத்தை பார்த்துவிட்டு ராஜ ராஜ சோழனுக்கு மரியாதை செலுத்திட்டு வரலாம். அதுதான் என்னுடைய திட்டம் என கூறி வர இயலாது என்றேன். பிறகு 'நானே வருவேன்' என நேற்று இரவு அடம்பிடித்து இன்று காலையில் வந்துவிட்டேன்'' என்று பேசினார். உடனிருந்த நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு ஆகியோர், அவர் 'நானே வருவேன்' படத்தை கிண்டலடித்தபோது எந்தவித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் நின்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE