“எனக்கு சாதி வெறி கிடையாது” - இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் விளக்கம்

By செய்திப்பிரிவு

‘கெளதம் வாசுதேவ் மேனன்’ என பெயர் மாற்றியதற்கு பின்னால் சாதி வெறி கிடையாது என இயக்குநர் கெளதம் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்று பேட்டியளித்த இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், "பிறக்கும் போதே எனக்கு வைத்த பெயர் கெளதம் வாசுதேவ் மேனன்தான். அது தான் எனது சான்றிதழ்களில் ஆதார் கார்டு போன்றவற்றிலும் உள்ளது. 'மின்னலே' படத்தின்போது டைட்டிலில் எனது முழுப் பெயரை பதிவு செய்ய தயார் செய்துவைத்திருந்தோம். ஆனால், தயாரிப்பாளர்தான் ஷங்கர் போல் பெயரை சுருக்கமாக வைத்துக்கொள்ள சொன்னார். கெளதம் வாசுதேவ் மேனன் என வைத்தால் நீ தொலைந்துபோய் விடுவாய் என அவர் ரெக்வஸ்ட்டாக சொன்னபோது என்னால் மறுக்க முடியவில்லை.

பச்சைக்கிளி முத்துச்சரம் படம்வரை இந்த நிலை ஒவ்வொரு தயாரிப்பாளரும் மூலமாக தொடர்ந்தது. ஆனால், ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் கட்டுப்பாடுகள் அனைத்தும் என்னிடம் இருந்தது. மேலும் அந்தப் படம் எனது தந்தையை குறித்த காட்சிகள் உள்ள எனக்கு ஸ்பெஷலான படம் என்பதால் அதில் இருந்து ‘கெளதம் வாசுதேவ் மேனன்’ என எனது முழுப்பெயரை போட்டுக்கொண்டேன். மற்றபடி, வெளியில் சொல்வது போல் எனக்கு சாதி வெறி போன்ற கேவலமான எண்ணங்கள் கிடையாது.

எனது தந்தை மலையாளி, தாய் தமிழ். அவர்கள் காதலித்து தான் திருமணம் செய்துகொண்டனர். அதேபோல் எனது மனைவி கிறிஸ்டியன். அதனால், எனது குடும்பத்தில் சாதி வெறி கிடையாது. அப்படி யாரவது நினைத்தால் அது அவர்களின் சிறிய மனப்பான்மையை எடுத்துக்காட்டுகிறது. அதில் எனக்கு எந்த கவலையும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE