விருமன் பட வெற்றிக்கு பிறகு கார்த்தி நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் இந்த வார இறுதியில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக, பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடிக்க 'சர்தார்' எனப் பெயரிடப்பட்ட படத்தில் இரட்டை பாத்திரம் ஏற்று நடித்துவருகிறார் கார்த்தி. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படம் தீபாவளி வெளியீடாக வெளிவரலாம் எனப் பேசப்படுகிறது.
இதையடுத்து குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய படங்களை இயக்கிய ராஜூ முருகன், இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கார்த்திக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக கூறப்பட்டுவந்தது. அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்தன. தற்போது விஜய் சேதுபதி மாற்றாக தெலுங்கு நடிகர் சுனில் வில்லன் பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் காமெடியனாக நடிக்கத் தொடங்கி ராஜமெளலி இயக்கிய 'மரியாதை ராமண்ணா' என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் சுனில். இதன்பின் மீண்டும் குணசித்திர வேடங்களில் நடிக்க தொடங்கியிருக்கும் அவர் சமீபத்தில் வெளியான 'புஷ்பா' படத்தில் வில்லனாக முதல்முறையாக மிரட்டினார்.
இப்போது கார்த்தி படம் மூலம் மீண்டும் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். வரும் அக்டோபர் 5 முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.