'சலார் மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் படம்' என்றும், இயக்குநர் பிரசாந்த் நீல் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் நடிகை ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார்.
நடிகை ஸ்ருதி ஹாசன் முக்கியமான நடிகர்களின் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 'கேஜிஎஃப்' புகழ் பிரசாந்த் நீல் இயக்கும் 'சலார்' படத்தில் பிரபாஸுடன் இணைந்து நடிக்கிறார். சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் 'வால்டேர் வீரய்யா' மற்றும் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடனான புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், 'சலார்' படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் குறித்து கூறுகையில், ''தொலைநோக்கு பார்வையில் தெளிவாக இருக்கும் ஒரு இயக்குநருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரசாந்த் நீலின் அனைத்து படங்களுக்கும் இதுவே பெரும் பலம்.
உண்மையில் அவர் ஓர் உலகத்தை உருவாக்குகிறார். அதில் நடிகர்களாக அந்த உலகத்தில் நடிப்பதே எங்களின் வேலை. ஆக்ஷன் - ட்ராமாவைக் கொண்ட இப்படத்திற்குள் அழுத்தமான மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் கதை இருக்கிறது. ‘சலார்’ மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் படம்'' என்று தெரிவித்துள்ளார்.