“உடல் மாறலாம்... ஆர்வம் ஒருபோதும் மாறாது” - காஜல் அகர்வால் அனுபவப் பகிர்வு

By செய்திப்பிரிவு

'நம் உடல் மாறலாம்; ஆனால் நமக்குள் இருக்கும் ஆர்வமும் உத்வேகமும் ஒருபோதும் மாறாது' என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

குழந்தைப்பேறுக்கு பிறகான காலம் என்பது பெண்களுக்கு சவாலான நாட்கள்தான். காரணம், குழந்தைப்பேறுக்கு பிறகு அவர்களுக்கான உடல் முன்பிருந்தது போலல்லாமல் பல்வேறு மாற்றங்களை சந்தித்திருக்கும். அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால் குழந்தைப்பேறுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு தன்னை தயாராக்கி கொண்டிருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், படப்பிடிப்புக்கு தன்னை தயார் செய்துகொண்டிருக்கும் காஜல் அகர்வால் கடுமையான குதிரையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

குதிரையுடன் பயிற்சி எடுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ``நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் உள்ளேன். குழந்தைப் பிறப்புக்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து நான் வேலைக்கு திரும்பி உள்ளேன்.

என்னுடைய உடல் முன்பிருந்ததைபோல தற்போது இல்லை. குழந்தைப் பிறப்புக்கு முன்பு என்னால் அதிகமான வேலைகளை செய்ய முடியும். ஜிம்மில் வொர்க்அவுட் செய்வது உள்ளிட்ட பல விஷயங்களை என்னால் செய்ய முடிந்தது. ஆனால், குழந்தைப் பிறப்புக்கு பின்பு முன்பிருந்த அதே எனர்ஜி லெவலை கொண்டு வருவது என்பது கடினமாக உள்ளது.

குதிரை மேலே ஏறுவதும், அதில் சவாரி செய்வதும் எனக்கு பெரும் சவாலாக உள்ளது. முன்பு எனக்கு எளிதாக இருந்த மார்ஷியல் கலைக்கும் உடல் எளிதாக ஒத்துழைக்கவிலை. நம்முடைய உடல் மாறலாம், மாற நேரம் எடுக்கலாம். ஆனால், நம்முடைய எல்லையில்லாத ஆர்வமும், ஆசையும் என்றும் மாறாதது. இதை நமக்கு நாமே தினம் உணர்த்தியாக வேண்டும். எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும். எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். நம்முடைய தேர்வு குறித்து என்றும் நாம் கவலைப்படக் கூடாது.

‘இந்தியன்2’ படத்தில் மீண்டும் நான் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. வேலையின் பொருட்டு புதிய திறமைகளை வெறும் பொழுதுபோக்காகக் கருதாமல் கற்றுக் கொள்வதில் மகிழ்ச்சி. நான் வீடு போல நினைக்கும் இந்த சினிமாத் துறையில் நான் இருப்பதை அதிர்ஷ்டவசமாக நினைக்கிறேன். என்னை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்காக எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பிற்கு நான் எப்போதும் நன்றி உடையவளாக இருப்பேன்’ என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE