சென்னை: வரும் 29-ம் தேதி அன்று நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘நானே வருவேன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் தனுஷ், இயக்குநர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி உள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘வி கிரியேஷன்ஸ்’ சார்பில் எஸ்.தாணு இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இயக்குநர் செல்வராகவன் எழுதி இயக்கி உள்ளார். தனுஷ், யோகி பாபு, பிரபு, இந்துஜா ஆகியோருடன் சுவீடன் கிரேக்க நாட்டு நடிகை எல்லி அவரம் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
தனுஷ், செல்வராகவன் மற்றும் யுவன் என இந்த மூவரின் கூட்டணி வெற்றிக் கூட்டணி. காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்தப் படமும் அந்த வரிசையில் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. தனுஷ் தனது அபார நடிப்பால் அதில் கவனம் ஈர்த்திருந்தார். த்ரில்லர் ஜானரில் இந்தப் படம் உருவாகி உள்ளதாக தெரிகிறது. படம் வரும் 29-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்த நொடி முதல் சமூக வலைதளங்களில் அதனை நெட்டிசன்கள் பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.
» உமிழ்நீருக்கு தடை, பெனால்டி ரன்... அக்.1 முதல் அமலுக்கு வரும் ஐசிசி-யின் புதிய விதிகள் என்னென்ன?