வாய்தா பட நடிகை தற்கொலை - காவல்துறை விசாரணை

By செய்திப்பிரிவு

‘வாய்தா’ படத்தில் நடித்த நடிகை தீபா என்கிற பவுலின் (29) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறிமுக இயக்குநர் மகிவர்மன் இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் 'வாய்தா'. இந்தப்படத்தில் நடிகை தீபா என்கிற பவுலின் ஜெஸ்ஸிகா நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு முன்னதாக அவர் விஷாலின் 'துப்பறிவாளன்' படத்தின் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவின்யூவில் உள்ள தனது வீட்டில் நடிகை தீபா என்கிற பவுலின் (29) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தீபாவின் செல்போனுக்கு அவரது உறவினர்கள் போன் செய்துள்ளனர். அவர் தொடர்ந்து போனை எடுக்காததால், அவரது நண்பர் பிரபாகரன் என்பவர் தீபாவின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த முழுமையான காரணம் எதுவும் வெளியாகவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE