'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஜூன் மாதம் ரிலீஸாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில்,
நடிகர் விக்ரம், கார்த்தி, ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தினை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் படம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் கார்த்தி, ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என படக்குழு தரப்பு தெரிவித்துள்ளது. படத்தின் இரண்டாம் பாகம், முதல் பாகம் வெளியாகி ஒன்பது மாதங்கள் கழித்து அடுத்த வருடம் அதாவது ஜூன் மாதம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும் உலகம் முழுக்க படம் வெளியாக இருக்கும் நிலையில், சென்டிமென்ட்டாக படக்குழு தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு போன பின்பு அடுத்து துபாய், சிங்கப்பூர், மலேசியா என படக்குழு புரோமோஷன்களுக்காக செல்ல இருக்கிறது.