‘பிரிவு’ ஒரு வலுவான உணர்வல்லவா? - ‘மல்லிப்பூ’ பாடல் குறித்து கவிஞர் தாமரை

By செய்திப்பிரிவு

''என்ன இருந்தாலும் 'பிரிவு' ஒரு வலுவான உணர்வல்லவா? இந்த வகைப் பாடல் இதற்கு முன் அவ்வளவாக வந்ததில்லை'' என ‘வெந்து தணிந்தது பாடல்’ குறித்து கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார்.

சிம்பு நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான ‘மல்லிப்பூ’ பாடல் ஹிட் அடித்துள்ளது. இந்தப் பாடலை பலரும் ரிபீட் மோடில் கேட்டு வருகின்றனர். குறிப்பாக வீட்டிலிருந்து நெடுந்தூரத்தில் வேலை நிமித்தம் காரணமாக பிரிந்திருக்கும் கணவன் - மனைவியிடைலான அன்பையும், பிரிவையும் உணர்த்தும் இந்தப்பாடலை புலம்பெயர் தொழிலாளர்கள் பாராட்டி வருகின்றர். இந்நிலையில், இந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பு குறித்து பாடலாசிரியர் கவிஞர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நீண்ட கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இடம்பெறும் 'மல்லீப்பூ வெச்சு வெச்சு வாடுதே' பாடல் பெரும்பாலானோரைக் கவர்ந்திருக்கிறது என அறிகிறேன். மகிழ்ச்சி . இந்தப் படத்திற்காக நான் எழுதிய முதல் பாடல் இது. போன ஆண்டே எழுதிப் பதிவு செய்து படப்பிடிப்பு நடத்தியிருந்தாலும் சென்ற மாதம்தான் பாடகி மதுஸ்ரீயின் குரல் பதிவு நடந்தது. இந்தப் பாடலைப் படமாக்கும் போதே படப்பிடிப்புத் தளத்திலிருந்து அழைத்துச் சொன்னார்கள் எல்லோருக்கும் பாடல் பிடித்திருக்கிறது, ஆட்டத்துக்கான பாடல் என்று!

பாடல் துள்ளிசையாக இருந்தாலும், வேலைக்காக வீட்டை/நாட்டை/உறவுகளை விட்டு வெகுதூரம் செல்லும் மனிதர்களின் பிரிவாற்றாமையே கரு. கணவன்-மனைவி பாடலாக இருந்தாலும், துளி விரசம் எட்டிப் பார்க்காமல் மேலோட்டமாகத் தொட்டுச் செல்லும்படியாகவே அமைத்துக் கொண்டேன். அதே சமயம், ஆழமான வரிகள் என்பதை ஊன்றிக் கவனித்தால் உணரலாம். அந்த வகையில் கௌதம், இரகுமான் எனக்குக் கொடுத்த சுதந்திரம் பெரிது!

படக்காட்சிக்காக மட்டுமல்லாமல், தொலைதூர உறவுகளின் உணர்வாக அமைத்துக் கொண்டதால் பலருக்கும் இந்தப் பாடல் பிடித்திருக்கிறது. என்ன இருந்தாலும் 'பிரிவு' ஒரு வலுவான உணர்வல்லவா ?? . இந்த வகைப் பாடல் இதற்கு முன் அவ்வளவாக வந்ததில்லை என்பதும் காரணம். முழுக்க முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல் ! . விரைவாக எழுதி விட்டேன். நாட்டுப்புறப் பாடல்கள் நான் எழுத மாட்டேன் எனப் பலரும் நினைத்திருப்பதால் பாடல் பதிவின் போது புன்னகைத்துக் கொண்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE