‘நேரம்’, ‘பிரேமம்’ படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் 7 வருடத்துக்குப் பிறகு இயக்கியுள்ள படம், ‘கோல்ட்’. இதில் பிருத்விராஜ், நயன்தாரா நடித்துள்ளனர்.
இந்தப் படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியிடவும் ஏற்பாடுகள் நடந்தன. இந்நிலையில் இதன் ரிலீஸ் திடீரென தள்ளி வைக்கப்பட்டது. ஒரு வாரம் கழித்து வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், இன்னும் தேதியை அறிவிக்கவில்லை.
இதுபற்றி அல்போன்ஸ் புத்திரன் கூறும்போது, ‘‘படத்தின் இசை, கிராபிக்ஸ் வேலைகள் பாக்கி இருக்கிறது. அது முடிந்ததும் ரிலீஸ் தேதியை அறிவிப்போம். வேலை முடியாததால், ஓணம் பண்டிகையின்போது வெளியிட முடியவில்லை. சமைக்காத உணவை யாரும் விரும்பமாட்டார்கள். நான் சமையல்காரன் என்பதால்,நன்றாக சமைக்கப்பட்ட உணவைத் தர விரும்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.