அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா, ரகுல் பிரீத்சிங் உட்பட பலர் நடித்துள்ள இந்திப் படம் ‘தேங்க் காட்’. இந்தப் படம், அக்டோபர் 24-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் டிரெய்லரில், நவீன சித்திரக் குப்தனாக வரும் அஜய் தேவ்கன், ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி இருப்பதாக சர்ச்சை எழுந்தது. ‘‘சித்திரக்குப்தன், ஒரு மனிதனின் நல்ல மற்றும் கெட்ட விஷயங்களைப் பதிவு செய்பவராகக் கருதப்படுகிறார். அப்படிப்பட்ட கடவுளை, கோட் சூட் அணிந்து சித்தரித்திருப்பது மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது’ என்று கூறி ஜான்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹிமன்சு ஸ்ரீவஸ்தவா என்பவர் வழக்குத் தொடுத்துள்ளார்.
இதற்கிடையே, கர்நாடகாவைச் சேர்ந்த இந்து ஜன ஜக்ருதி சமிதி என்ற இந்து அமைப்பு இந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்நிலையில், குவைத் தணிக்கைத் துறை இந்தப் படத்துக்கு சான்றிதழ் தர மறுத்துள்ளது. இதனால் இந்தப் படம் அங்கு வெளியாகாது என்று கூறப்படுகிறது.