“வீடியோ காலில் இளவரசியிடம் சாரி சொல்லி விடுகிறேன்”... - ட்விட்டரில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி சுவாரஸ்யம்

By செய்திப்பிரிவு

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக மணிரத்னம் இயக்கியுள்ளார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இரண்டு பாகமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

வெளியீட்டை முன்னிட்டு படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், நடிகர் விக்ரம் மற்றும் நடிகை த்ரிஷா இருவரும் தங்களின் ட்விட்டர் பக்கத்தின் பெயரை மாற்றியுள்ளனர். ‘பொன்னியின் செல்வன்' படத்தின் கேரக்டர் பெயர்களை இருவரும் மாற்றிக் கொண்டுள்ளனர்.

கூடவே, விக்ரம் தனது பக்கத்தில், "சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா? குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா, வருவாய் தானே?அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!" என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தி பதில் கொடுத்துள்ளார். அதில், "இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. As I am suffering from fever I want work from home. வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me." என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு விக்ரம், "சரி தான்.‌ இளைப்பாறு நண்பா. Detox. Rest. Recuperate. சில போர்களை தனியாக சென்று தான் வெல்ல வேண்டும். தஞ்சை சென்று நம் அன்பு படைகளை சந்தித்தே ஆகவேண்டும். See you on the other side வந்தியத்தேவா" என்று பதில் கொடுத்துள்ளார்.

அதேநேரம், "தம்பிவுடையான் படைக்கு அஞ்சான் இதோ நானும் வந்தியதேவனுடன் வந்து விடுகிறேன், என் அண்ணனை வீழ்த்தவும் வெல்லவும் யாராலும் இயலாது" என்று அருண்மொழியாக நடித்துள்ள ஜெயம்ரவி பதிவிட்டுள்ளார். இந்த உரையாடல் தற்போது வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE