''எல்லோரும் மனசார கூல் சுரேஷுக்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும். அவர் வேற லெவல். படத்துக்கு அவர் தனி ப்ரமோஷன் செய்துள்ளார்'' என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. எழுத்தாளர் ஜெயமோகனின் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை ஐஸரி கணேசன் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், படம் தொடர்பாக பேச ட்விட்டர் ஸ்பேஸில் நடிகர் சிம்பு கலந்துகொண்டு பேசினார். 'வெந்து தணிந்தது காடு... சிம்புவுக்கு வணக்கத்த போடு' என தொகுப்பாளர் சொன்னதும், அதற்கு பதிலளித்த சிம்பு ''எல்லோரும் மனசார கூல் சுரேஷுக்கு நன்றி சொல்லிதான் ஆகவேண்டும். அவர் வேற லெவல். படத்துக்கு அவர் தனி ப்ரமோஷன் செய்துள்ளார். தேங்க்யூ கூல் சுரேஷ்'' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ''படம் நாளை வெளியாக உள்ளது. இந்த முறை எனக்கு முதல் படம் நடித்த நாயகன் மனநிலையில் தான் இருக்கிறேன். படத்தை ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என தெரியவில்லை. வித்தியாசமான ஒரு படம் இது. கமர்ஷியலாக மட்டுமே படத்தில் நடித்துக்கொண்டிருக்க முடியாது. வித்தியாசமான படத்தை அவ்வப்போது முயற்சி செய்வது போல தான் இந்தப் படம் எனக்கு. ஏன் நாம் எப்போதும் ஒரு ஸ்டார் படமாகவே நடிக்கிறோம். கொஞ்சம் விலகி நடிக்கலாம் என நினைத்தேன்.
» ‘வெந்து தணிந்தது காடு’ முதல் ‘சினம்’ வரை: இந்த வார தியேட்டர் ரிலீஸ் படங்கள் - ஒரு பார்வை
கௌதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் இசையை வைத்துக்கொண்டு லவ் ஸ்டோரி ஆக்கியிருக்கலாம். அது ஒரு மினிமம் கேரண்டி கொடுத்திருக்கும். ஆனால், அப்படியில்லாமல் வித்தியாசமாக முயற்சி செய்தார். நானும் அதற்காக உழைத்தேன். படம் மக்களுக்கு பிடித்துள்ளது, பிடிக்கவில்லை என்றெல்லாம் தாண்டி என்னை பொறுத்தவரை பார்வையாளர்கள் விழிப்படைந்துவிட்டனர். படம் பார்ப்பவர்கள் படத்திற்காக இவர்கள் உண்மையான கடுமையான உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள் என நினைத்தால் போதும். அதுதான் உண்மையான வெற்றி என நான் நினைக்கிறேன்'' என்றார்.