“கோபம் எல்லோருக்குமானது தான். அது இல்லாம இங்கயாரும் இல்லை. ஆனா, எதுக்கு கோபப்படறோம்ங்கறது முக்கியம். ஒருத்தரோட கோபத்துல நியாயம், அநியாயம்னு ரெண்டு பக்கம் இருக்கு. நியாயத்துக்காகக் கோபப்படறதுதான் ‘சினம்’ சொல்லும் கதை” என்கிறார் இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன். ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘யுவன் யுவதி’, ‘ஹரிதாஸ்’, ‘வாஹா’ படங்களை ஏற்கெனவே இயக்கியவர். வரும் 16-ம் தேதி வெளியாகும் ‘சினம்’ பற்றி பேசினோம்.
நியாயமான கோபம்னா எப்படி?
எதுக்கு கோபப்படணுமோ, அதுக்கு கோபப்படாம இருக்க முடியாது. அதைதான் நியாயமான கோபம்னு சொல்றேன். இதுல பாரி வெங்கட்-ங்கற கேரக்டர்ல அருண் விஜய் நடிக்கிறார். அவருக்கு ஒரு குடும்பம் இருக்கு. எதையும் எதிர்பார்க்காத நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் குடும்பத்துல ஒரு சம்பவம் நடக்கும்போது எல்லாமே மாறுது. அதனால சமுதாயத்துல நடக்கிற சில விஷயங்கள் மீது கோபப்படறார். அந்தப் பிரச்னைக்கு அவரால முடிஞ்ச என்ன தீர்வை சொல்றார் என்பதுதான் கதை.
உண்மை சம்பவக் கதையா?
அப்படியில்லை. ஆனா, இந்தக் கதையில வர்ற சம்பவம் மாதிரி நிறைய விஷயங்கள் நடந்திருக்கு. பேப்பர்ல படிக்கிற சில விஷயங்களை, நாம அப்படியே கடந்து போயிட முடியாது. சில சம்பவங்கள் பெரிய வலியை ஏற்படுத்தும். அப்படி நடக்கிற ஒரு விஷயத்தை, ஒரு போலீஸ்காரரா அருண் விஜய் எப்படி எதிர்கொண்டார்னு கதை நகரும்.
ஏற்கெனவே சில படங்கள்ல, அருண் விஜய் போலீஸ் அதிகாரியா நடிச்சிருக்காரே...
அவர் போலீஸ் கேரக்டர்கள்ல நடிச்சிருந்தாலும் இதுல அவர் அமைதியான, அடக்கமான போலீஸா நடிச்சிருக்கார். ஆனா நடிப்புல அழுத்தம் இருக்கும். அருண் விஜய் சிறப்பா நடிக்கக் கூடியவர். இதை நான் சொல்ல வேண்டியதில்லை. அந்த வித்தியாசத்தைப் படத்துல பார்க்க முடியும். உதவி ஆய்வாளரா வரும் அவருக்கு மூனு ஆக் ஷன் காட்சிகள் இருக்கு. ஆனா, இது ஆக் ஷன் படம் இல்லை. முழுக்க முழுக்க குடும்பத்தோட பார்க்கிற படமா இருக்கும்.
பாலக் லால்வாணி என்ன கேரக்டர் பண்றாங்க?
மதுங்கற கேரக்டர்ல நடிச்சிருக்காங்க. அருண் விஜயோட மனைவி. இவங்களுக்கு 7 வயசுல ஒரு பையன். பாலக் லால்வாணி இதுக்கு முன்னால சில படங்கள்ல நடிச்சிருந்தாலும் இது அவங்களுக்கு முக்கியமான படமா இருக்கும்.
ரிலீஸ் ஏன் இவ்வளவு தாமதம்..?
கரோனாதான் காரணம். ஷூட்டிங் முடிஞ்சாலும் உடனடியா ரிலீஸ் பண்ண முடியலை. இப்ப ரிலீஸ் ஆகறதும் சரியானது தான். இந்தப் படத்துல சினிமாத்தனம் அதிகம் இருக்காது. மிகைப்படுத்தல் இல்லாம, இயல்பா பண்ணியிருக்கேன். கண்டிப்பா எல்லோருக்கும் பிடிச்ச படமா இருக்கும்.