“இனி என் அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை வழங்க வேண்டாம்” - நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ச்சியாக தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் . 'ருத்ரன்', 'சந்திரமுகி 2', 'அதிகாரம்', 'துர்கா' உட்படப் பல படங்கள் இதில் முக்கியமானவை. குறிப்பாக, 'சந்திரமுகி 2' அதிக எதிர்பார்ப்புக்குள்ளதாக ஒன்றாக அமைந்துள்ளது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பிற்காக லாரன்ஸ் தயாராகி வருகிறார்.

இதனிடையே, ராகவா லாரன்ஸ் இன்று தனது வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், "அனைவருக்கும் வணக்கம், நான் இரண்டு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலில் சந்திரமுகி 2வுக்காக என் உடலை மாற்றிக் கொள்ள நான் எடுக்கும் ஒரு சிறு முயற்சியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்த மாற்றத்தை கொண்டு வந்த எனது பயிற்சியாளர் சிவா மாஸ்டருக்கு நன்றி. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் எனக்கு வேண்டும்.

இரண்டாவதாக, இத்தனை ஆண்டுகளாக என் அறக்கட்டளைக்கும் ஆதரவளித்த அனைத்து நன்கொடையாளர்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்து உங்கள் நன்கொடைகளால் என் சேவைக்கு ஆதரவு கொடுத்தீர்கள். எனக்கு தேவைப்படும் போதெல்லாம் உங்கள் உதவியை பெற்று என்னால் முடிந்த உதவிகளை அறக்கட்டளை மூலம் செய்துள்ளேன்.

இப்போது, நான் நல்ல இடத்தில் இருக்கிறேன். மேலும் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறேன். எனவே, மக்களுக்கு சேவை செய்யும் முழு பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். இதனால் இனி என் அறக்கட்டளைக்கு யாரும் உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம். மாறாக உங்களின் ஆசீர்வாதம் எனக்கு போதும். இத்தனை ஆண்டுகளாக எனக்கு கிடைத்த ஆதரவுக்கும் அன்புக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE