நடிகை குஷ்பு லண்டனுக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது அங்கு இருக்கும் அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில், ‘லண்டனில் உள்ள புதிய வீட்டில் என் முதல் கோப்பை தேநீர்’ என்று புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். இதற்கு பலர் வாழ்த்துத் தெரிவித்தனர். சிலர் அவர் லண்டனின் சொந்த வீடு வாங்கிவிட்டதாகக் கூறி ட்ரோல் செய்யத் தொடங்கினர்.
இந்நிலையில், அவர் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். ‘‘புதிய வீடு என்றுதான் சொன்னேன். சொந்த வீடு என்றா சொன்னேன்? சில முட்டாள்கள் வாடகை வீட்டை கேள்விப்பட்டதில்லையா? சுதந்திரமான, வெற்றிகரமான பெண்ணைப் பார்ப்பது சிலருக்குப் பொறாமையை ஏற்படுத்தும் என்பதை அறிவேன். அவர்கள் தூக்கம் இல்லாத இரவுகளை அனுபவிக்கட்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.