‘நட்சத்திரம் நகர்கிறது’ சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது: பா.ரஞ்சித்

By செய்திப்பிரிவு

“ 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம் சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தை மக்கள் ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி'' என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராமன், கலையரசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியான இப்படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார். யாழி ஃபிலிம்ஸுடன் இணைந்து பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் மக்களுடன் மக்களாக சேர்ந்து 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை கண்டு ரசித்தார் பா.ரஞ்சித். கலையரசன், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட படக்குழுவினர் அவருடன் இருந்தனர்.

இந்நிலையில் படம் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பா.ரஞ்சித், ''இந்த வெற்றியை எதிர்பார்த்துதான் படம் எடுத்தேன். மக்கள் படத்தை உள்வாங்கிக்கொண்டு அதனை ஏற்றுக்கொண்ட விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தவிர, படம் சமூகத்தில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நினைக்கும்போது சந்தோஷமாக உள்ளது. என் மகள் படம் பார்த்தார். அவருக்கு படம் மிகவும் பிடித்திருந்தது'' என்றார்.

தொடர்ந்து நடிகர் கலையரசன் பேசுகையில், ''நிறைய எதிர்பார்க்காத இடங்களில் பார்வையாளர்கள் கைதட்டி ரசித்து படம் பார்த்தனர். இந்தப் படத்தை அழகான புரிதலுடன் உள்வாங்கிக்கொண்டு அதனை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதே சந்தோஷமான விஷயம். நிறைய இடங்களில் படம் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE