“சிம்பு ஆனந்தக் கண்ணீர் விடுவதைப் பார்க்க வேண்டும்” - கமல்ஹாசன்

By செய்திப்பிரிவு

''படத்தின் வெற்றி விழாவில் சிம்பு ஆனந்தக் கண்ணீர் விடுவதை நான் பார்க்க வேண்டும். ‘வேட்டையாடு விளையாடு’ 2-ம் பாகம் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம் சொன்னார். ஆனால், இடையில் கரோனா வந்துவிட்டது, மீண்டும் நடக்கும்'' என்று நடிகர் கமல்ஹாசன் பேசினர்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை வேல்ஸ் பல்கலைகழகத்தில் நடைபெற்றது. படத்தின் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், நடிகர் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், “‘வெந்து தணிந்தது காடு’ என்பது பாரதியாரின் வரிகள். அது எனக்கு மிகப் பிடிக்கும். அதன் அடுத்த வரிகள் ‘தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ’. அதுபோல் இந்தப் படத்திலும் அந்த நெருப்பு இருக்குமென நம்புகிறேன். வேல்ஸ் என்னை தந்தை போல் என்பார். அவருக்கு நான் எப்போதும் குடும்பம்தான். நான் தனியாக ஏதும் செய்யவில்லை. தமிழ்ப் படத்தை தூக்கி நிறுத்துவது தமிழ்ப் படம்தான். தமிழ்ப் படத்தை கெடுப்பதும் தமிழ்ப் படம்தான். நல்ல படம் கொடுக்க வேண்டும். புதிதாக கொடுக்க கொடுக்க ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள். தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகரும் இல்லை. அது ரசிகர்கள் மட்டுமே. மக்கள் ஆதரவு தருவார்கள்.

சிம்பு கடின உழைப்பாளி. படத்தின் வெற்றி விழாவில் சிம்பு ஆனந்த கண்ணீர் விடுவதை நான் பார்க்க வேண்டும். வேட்டையாடு விளையாடு 2-ம் பாகம் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம் சொன்னார். ஆனால், இடையில் கரோனா வந்து விட்டது, மீண்டும் நடக்கும். வேல்ஸ் ஃப்லிம்ஸ்ல் படம் செய்ய கேட்டுகொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி வாய்ப்புகளை நான் மிஸ் செய்வதில்லை. நாளையே பேசி முடித்துவிடலாம். இந்தப் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்'' என்றார்.

ஏ ஆர் ரஹ்மான் பேசுகையில், “கௌதம் இசைக் காதலன் அவர் எந்த டியூன் தந்தாலும் எடுத்துக்கொள்வார். அதனால், அவரின் நம்பிக்கைக்காக நிறைய உழைப்பேன். நல்ல பாடல்கள் தர முயல்வேன். தாமரை வரிகள் எழுதும்போது அந்தப் பாடல்கள் ஸ்பெஷலாக மாறிவிடும். கௌதம் படத்தை நன்றாக எடுத்து விடுவார் என தெரியும். அதனால் தான் அவருடன் தொடர்ந்து வேலை செய்கிறேன். அப்புறம் சிம்புவும் பிடிக்கும். அவருக்காகவும்தான் இந்தப் படம் செய்தேன். பாடல்களும் படமும் நன்றாக வந்துள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE